Wednesday, February 16, 2011

உயிருடன் இருக்கிறார். சட்டபூர்வமாகப் புதைக்க முடியாது

"உள்ளை வாங்கோ டாக்டர்"

அவரது மகன் மரியாதையுடன் அழைத்தார்.

ஆடம்பர மார்பிள் பதித்த நீண்ட விசாலமான தரை, அலங்கார ஷோபாக்கள், உயர்ந்த பரந்த ஷோகேஸ்கள், அதி அலங்கார மின்சார லையிட்டுக்கள், வீடியோ, ஓடியோ நிறைந்த வரவேற்பறையைத் தாண்டி ஆடம்பர அறைகளைத் தாண்டி, நவீன சமையலறை, ஸ்ரோர்ஸ் அறைகளையும் தாண்டிப் போய்க் கொண்டே இருந்தோம்.


கடைசியாக வீட்டின் பிற்பகுதியை அடைந்தோம்.

விசாலமான வீட்டின், ஒதுக்குப் புறமான பின் வராந்தையை அரைச் சுவராலும், இரும்புக்கம்பி வலைகளாலும் அவசரமாக அடைத்துத் தயாராக்கிய அறை அது.

நாயை அடைத்து வைக்கும் அறைக்கு என்னை அழைத்து வருகிறாரா?

மூத்திர நாற்றம், மூக்கினைத் தாக்க தயங்கியே அடியெடுத்து வைத்தேன்.

அது முதியவர் அறை!!


பழைய பலகைக் கட்டிலில் குறண்டியபடி கிடந்தார் அவர்.

தலையணையைத் தவிர படுக்கை விரிப்புகளோ மெத்தையோ எதுவும் இல்லை. கட்டிலின் கீழே ஊறித் தெப்பிக் கிடந்த சாக்கு,மூத்திர நாற்றத்தை வஞ்சகமின்றிப் திசையெங்கும் பரப்பிக் கொண்டிருந்தது!

அறை நிறைய இலையான்கள். அவரையும், கீழே கிடந்த சாக்கையும் மாறி மாறிச் சுவைத்து, மகிழ்ந்து பறந்து திரிந்தன.

கொசுக்கள் உற்சாகமாகக் கலைந்து கலைந்து மொய்த்தன!

அறைக்குள் நுழையவே கால்கூசியது!


மனம் தயங்கியது.

ஆயினும் கடமை உணர்வுடன் அவரருகில் சென்றேன்.

நோயின் வேதனையிலும் பறக்கணிப்பின் மனத் துயரிலும் மூழ்கிக் கிடந்த முகத்தில், என்னைக் கண்டதும் சோகம் கலந்த புன்னகை!

"கோடி கோடியாகச் சம்பாதித்த நான், இப்போ ஒதுக்கித் தள்ளப்பட்டுக் கிடக்கும் நிலையைப் பாருங்கள்" என்று சொல்வது போலிருந்தது. அந்த முன்னைய நாள் மதிப்புக்குரிய பெரிய மனிதர்!

கனத்த மனதுடன் அவரைப் பரிசோதித்து மருந்துகைளக் கொடுத்து, ஆறுதல் கூறிவிட்டுப் புறப்பட்ட நான், மகனிடம் அவரை ஒதுக்குப்புறமாக, ஒதுக்கி விட்டதற்கான காரணத்தை விசாரித்தேன்.

"ஐயாவுக்கு சலம், மலம் போறது தெரியாது.
பெரிய மனிசர் வந்து பிழங்கிற இடத்திலை அவரை எப்படி வைச்சிருக்கிறது. வெக்கந்தானே.

பின் விறாந்தை என்டால் ஆக்களின்ரை கண்ணிலை படாது. சலம் மலம் போனாலும் அப்படியே வெளியிலை கழுவி விட்டிடலாம்" என்றார்.

பெத்து வளத்து ஆளாக்கி, உயர்ந்த நிலையில் உங்களை வைச்சிருக்கிற ஐயாவை வீட்டுக்கை வைச்சிருக்கிறது வெக்கமோ?|எனக் கேட்க வேண்டும் போலிருந்தது.

தமிழர்களாகிய நாம் நீண்ட கலாச்சார பாரம்பரியத்தில் வந்தவர்கள். பெற்றோரையும், முதியவர்களையும் மதிப்பும் மரியாதையும் கொடுத்து, அவர்களை அன்புடன் பேணிப் பாதுகாப்பவர்கள் என்று பெருமைப்படுகிறோம்.

காசியப்பனைப் போல் பெற்ற தந்தையையே சுயலாபத்திற்காக, சுற்றவரச் சுவர் எழுப்பி, உயிரோடு மூடிக் கட்டி மூச்சடைக்கக் கொன்றவர்கள் எமது பரம்பரையில் கிடையாது என்று சரித்திரச் சான்றுகளில் சமாதானம் அடைகிறோம்.

ஆனால் பெற்றோர்களைச் சரியாகப் பேணிப் பாதுகாக்காமல் விடுவதாலோ, அல்லது உரிய காலத்தில் உரிய வைத்திய வசதிகளைக் கொடுக்காமல் விடுவதாலோ, அநியாயமாகச் சாகவிடுபவர்களை பற்றி என்ன சொவ்வது?
 
Geoffrey Madan  ஒரு கருத்துச் சொன்னார்.
"ஆம் அவர் உயிருடன் இருக்கிறார். அவரைச் சட்டபூர்வமாகப் புதைக்க முடியாது என்ற அளவில் மாத்திரம்".

இத்தகைய மனநிலையோடுதான் வாழ்ந்து கொண்டிருக்கிறோமா?

கனவாகிப் போன வாழ்வு
 80களில் சிரித்திரனில் எழுதி 90 களில் மல்லிகை வெளியீடாக வந்த 'டொக்டரின் டயறி' என்ற எனது நூலில் வெளியான கட்டுரையிலிருந்து ஒரு பகுதி

Post Comment

6 comments:

S.Sudharshan said...

//ஆம் அவர் உயிருடன் இருக்கிறார். அவரைச் சட்டபூர்வமாகப் புதைக்க முடியாது என்ற அளவில் மாத்திரம்"//
.
நல்ல பதிவு ..மனங்களின் பக்கம் இருந்து...

துளசி கோபால் said...

ஐயோ:(

இது என்ன கொடுமை. டிக்னிட்டி இல்லாம ஒரு வாழ்க்கையா..... பாவம் அந்த முதியவர்.

அதான் கையும் காலும் நல்லா இருக்கும்போதே போய்ச்சேர்ந்துறனுமுன்னு கடவுளை தினம் ஒரு தரம் வேண்டும் நான் இனி மூணுதரம் வேண்டணும்போல!

ஒரு நர்ஸ் போட்டுப் பார்த்துக்கக்கூடாதா? அவுங்களாவது சுத்தம் பண்ணி வைப்பாங்க இல்லையா?

மனசுக்குக் கஷ்டமாப்போயிருச்சு டொக்டர் ஐயா:(

சுந்தரா said...

மனம் வருந்தவைக்கும் பதிவு.

தனக்கும் முதுமைவரும் என்பதை அறியமாட்டார்களா இவர்கள்?

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நன்றி சுதர்சன். பணம் பவிசு, மரியாதை இவற்றின் முன் மனிதாபிமனம் அவர்களுக்குச் செத்துவிடுகிறது.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

@துளசி கோபால். உண்மையாக நடந்த சம்பவம். ஆனால் சுமார் 20 -25 வருடங்களுக்கு முன்னர். அக்காலத்தில் வீட்டில் வைத்துப் பார்க்கும் வசதி இருக்கவில்லை என்பது உண்மையாயினும் அவரைக் கவனிக்க ஒன்று அல்ல பலரை வேலைக்கு அமர்த்தக் கூடிய வசதி மகனுக்கு இருந்ததை நினைக்க இன்றும் மனதுக்கு துன்பமாக இருக்கிறது.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

காவேலை விழக் குருத்தோலை சிரிக்கும் கதைதான் சுந்தரா.

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க