Sunday, December 20, 2009

மருத்துமனையில் கணனியில் குறிப்பு

கணவனும் மனைவியுமாக வந்திருந்தனர்.
ஐம்பதுக்கு சற்று மேலாக வயதிருக்கலாம்.
புதியவர்கள்.
இன்றுதான் என்னிடம் மருந்தெடுக்க
முதல் முதலாக வந்திருந்தார்கள்.


அவவிற்கு நிறையச் சொல்ல வேண்டியிருந்தது.

தன்னைப் பற்றிய முழு விபரமும் தனது மருத்துவருக்குத் தெரிவித்துவிட வேண்டும் என்ற அவா.

பிறந்த காலத்திலிருந்து ஆரம்பித்தார்.

பத்து நிமிடங்கள் கழிந்துவிட்டதை நான் அவதானித்த போது அவர் தனது கதையில் கன்னிப் பருவத்தில் இருந்தார்.

திடீரெனக் கண் சிமிட்டினார்! நான் சற்றுத் திடுக்கிட்டேன்.


கடைக்கண்ணால் கணவருடன் மௌன மொழி பேசினார்.

கணவனை பார்த்துத்தான் கண்சிமிட்டினார் என்பது புரிவதற்கிடையில் அவர் மற்றொரு உலகில் சஞ்சரிக்கத் தொடங்கினார்.

தாங்கள் காதலித்த போது
கடற்கரையில் தான் தடக்கி விழுந்து
காலில் உரசிய போது
அவர் செய்வதறியாது திகைத்து நின்றதும்,
பின் தன் கால்களைப் பற்றியபடி....

தமது காதல் அனுபவத்தில் சுவார்ஸமாகத் திளைக்க ஆரம்பித்தார்.


இந்த வேகத்தில் போனால் கருக்கட்டி. கர்ப்பமாகி, குழந்தை பெற்று, வளர்த்து, அவர்களுக்கு கலியாணம் பேசி...

ஏனைய நோயாளிகளின் ஏச்சுக்கு ஆளாக நேரிடுமே என்ற எண்ணம் தலை தூக்க ஒரு காதால் அவர் சொல்வதைக் கேட்டுக் கொண்டே ஏனைய விபரங்களைக் கேட்டுக் குறிக்கலாம் என முடிவு செய்தேன்.

பெண்மணியைப் பேசவிட்டுவிட்டு கணவரிடம் மனைவியின் பெயரைக் கேட்டேன்.

மிஸஸ் .... எனத் தனது பெயரைக் கூறியபோது,
முழுப் பெயரைக் கேட்டேன்.

அதாவது மனைவியின் பிறப்புப் பெயரை.

'இவன் யார் எனது மனைவியின் பெயரைக் கேட்பதற்கு!' என எண்ணினாரோ?
தலை நரைத்த அவர் சற்று யோசனையின் பின் மனைவியின் பெயரைத் தயக்கத்துடன் சொன்னார்.


கம்பியூட்டரில் பதிந்து கொண்டேன்.

இருவர் கண்களும் கம்பியூட்டரிலும் என்னிலும் ஆழப் பதிந்து மீண்டன.

அடுத்து வயது, விலாசம் என அடுத்தடுத்துக் கேட்டபோது கணவன் மட்டுமின்றி மனைவியின் முகத்திலும் சிந்தனை ரேகைகள் படர்ந்தன.

ஆச்சரியத்துடன் என் முகத்தைப் பார்த்தனர்.

இருவர் கண்களும் தமக்குள் ஏதோ பேசிக் கொண்டதாக எனக்குப் பட்டது.

பொலீஸ் பதிவு போல நானும்; விபரம் கேட்கிறேன்,
இதுவும் ஏதோ பாதுகாப்பு விவகாரம் என எண்ணுகிறார்கள் போலும்.

ஆயினும் கருத்து எதுவும் சொல்லாமல்
அடுத்த கேள்விக்குத் தாவினேன்.

அடுத்த கேள்வியையும் கேட்டவுடன்
அவர்கள் முகம் ஆச்சரியத்தின் எல்லையை எட்டியது.

சந்திர பிம்பமென வதனத்தில் சற்று மகிழ்ச்சியும் பரவியது.

'டொக்டர் அப்படித்தான். நான் சொன்னேன் பார்த்தீர்களா' என்றாள் மனைவி.

ஆமாம் என்று விடையளிப்பது போலத் தலையை ஆட்டினார் கணவன்.

இப்பொழுது ஆச்சரியத்தில் மூழ்குவது எனது முறையாயிற்று.

அவரது பிறந்த திகதியைத் தானே கேட்டுப் பதிந்தேன்!!

'நான் என்ன புதுமையாகச் செய்தேன் என இவள் கண்டு பிடித்தாள். அவரும் ஆமோதிக்கிறாரே!' என வியந்தேன்.

இருந்தபோதும் வெளிப்படையாகக் கேட்க வெட்கம் தடுத்தது.

ரகசியம் வெளிப்பட்டது. அவளின் அடுத்த பேச்சில்.

"டொக்டர் நீங்கள் குறிப்பைப் பார்த்து வைத்தியம் செய்யிறது எங்களுக்கு வலு சந்தோசம்."

நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

நான் நோயாளியின் விபரங்களை அக்கறையாகப் பதிவு செய்வதைக் கவனித்துவிட்டார் அல்லவா?

அக்கறையுள்ள டொக்டர் என நினைக்கிறார்கள்.

பெருமையில் மிதந்தேன்.


பத்து வருடங்களுக்கு மேலாக
ஒவ்வொரு நோயாளியினதும் பெயர் முதற் கொண்டு
அவர்களின் நோய் விபரங்களையும் பதிவு செய்து வருவதால்
நோயாளர் கவனிப்பில்
நானே இலங்கையில் சிறந்தவன்,
முன்னோடி என்றெல்லாம்
நானே என்னை மெச்சிக் கொள்வதுண்டு.

கணனித்துறை நண்பன் கார்த்தியின் உதவி கிட்டியதால் இலங்கையில் அவ்வாறான டேட்டா பேசை முதலில் ஆரம்பித்தவன் நானே.

இன்று கூட கையில் அடங்கக் கூடிய மருத்துவர்களே இங்கு அவ்வாறு செய்கிறார்கள்.

நோயாளிகள் தங்கள் பதிவுகளை தாங்களே பாதுகாக்காத நிலையும் இங்கு உண்டு. ஆனால் ஒரு விரல் சொடுக்கில் அவர்கள் நோய் விபரங்களை எனது கணனியில் கண்டறிய முடியும். பல நோயாளிகள் இதைப் புரிந்து கொள்வதில்லை.

'முகத்தைப் பார்க்காது மொனிட்டரைப் பார்த்து வைத்தியம் செய்பவர்'
நக்கல் அடிப்பவர்கள் நிறையவே உண்டு.

இவர்களாவது என்னைப் புரிந்து கொண்டார்களே என திருப்தியடைந்தேன்.
அம்மா ஏதோ சொல்ல ஆரம்பித்தார். மேலும் பாராட்ட முனைகிறாரா? அக்கறையுடன் கவனித்தேன்.

"அந்தக் காலத்திலை ஓலை பார்த்துத்தான்
பரியாரிகள் வைத்தியம் செய்வினம்...."


"..இப்ப ஆர் அப்படியிருக்கினம்?
நீங்கள் ஒராள்தான்
காலத்திற்கு ஏற்றாற் போல
கொம்பியூட்டரிலை
சாதகக் குறிப்பு பார்த்துச் செய்யிறியள்."

என்றாள் மனைவி.

இப்படியும் எனது கொம்பியூட்டர் பதிவுக்கு அர்த்தமா? அதிர்ந்தேன்.

அறிவியலுக்கு ஒவ்வாத சாத்திரம், எண்சோதிடம், ஓலை, காண்டம் வாசிப்பு, போன்ற எதிலும் நம்பிக்கையற்ற ஒருவனுக்கு இப்படியும் ஒரு பாராட்டா?

0.0.0.0.0.

Post Comment

Friday, December 4, 2009

லைட் போஸ்டைக் கண்டதும் நாய்கள் போல ...

எங்களுடைய பாரம்பரியத்தில் வந்த
இன்னுமொரு அரிய பழக்கத்தையும்
இங்கு ஞாபகப்படுத்தலாம்.
அது இளகிய மனம் பற்றியதும்கூட.

நாங்கள் மனிதர்களில் மாத்திரம் அன்பு கொண்டவர்களல்ல.

விலங்குகளுக்கும், மரஞ்செடி கொடிகளுக்கும் எமது அன்பு வட்டம் விரிகிறது.

தெருவோரம் வேலிகளுக்கு ஊன்று கோலாக நாட்டப்பட்டுள்ள பூவரசு, கிளிசெறியா, கிளுவைக் கதியால்களும் எமது அன்பைப் பெறத் தயங்குவதில்லை.

அதுவும் எமது வீட்டுக் கதியால்களுக்கு என்றில்லை. அக்கம்பக்கத்து வீட்டுக்காரரின் கதியால்களுக்கும், நாம் நடந்து செல்லும் வீதிகளின் முகமறியாதவர்களின் வீட்டுக் கதியால்களுக்கும் அன்பு ஊற்றெடுத்துப் பாய்கிறது.

ஊரான் வீட்டுப் பிள்ளைக்கு ஊட்டி வளர்த்தால் தன் வீட்டுப் பிள்ளை தானே வளரும் என்ற பழமொழியை அச்சொட்டாகக் கடைப்பிடிப்பவர்களல்லவா நாம்?

கதியால்கள் நீரின்றி வாடியும்
போஷாக்கின்றி வெளிறியும்
கிடப்பதைக் கண்டால்
எம் மனது தாங்கவே தாங்காது.


உடனடியாகவே யூறியா கலந்த நீரூற்றி உதவிடுவோம்.
இதற்காக நாலு பேர் பார்க்கும் வீதியில் நின்று
கோவணத்தைக் கழற்றக்கூட
நாங்கள் தயங்குவதில்லை.

இயற்கை நமக்கு எவ்வளவோ கற்றுக் கொடுத்திருக்கிறது. நாய்களும்தான்.

லைட் போஸ்டைக் கண்டதும் அவை மூன்று காலில் நின்று மோனத் தவம் செய்து தீர்த்தம் தெளிப்பது எம் சிந்தையைக் கவர்ந்ததால்தான் நாமும் கதியால்களைக் குளிர்விக்கிறோம் போலும்.

இரண்டாயிரம் ஆண்டு காலமாயிருந்தாலும் எங்களை நவீன காலத் திற்கும் நாகரீகத்திற்கும் ஏற்ப மாறாத பழமை விரும்பிகள் என எவரும் எம்மைக் குறைகூறவும் நாம் இடமளிப்பதில்லை.

கொழும்பில் கதியாலைக் காணமுடியாது என்பதால் துவண்டுவிடுவ தில்லை.

காலத்திற்கும் இடத்திற்கும் ஏற்ப எம்மை மாற்றிக் கொள்ளும் மனவிரிவு கொண்டவர்கள்.


இதனால் லைட் போஸ்டுகளையும் மதில் களையும் சிறுநீர் கொண்டு அடியோடு பிரட்டி வீழ்த்த முக்கி முயல்வோம்.

இதைப் பார்த்து சகோதர இனத்தவர்கள் மூக்கில் கைவைத்து ஆச்சரியப் படுவதுண்டு.

சிலவேளை அவர்களும் எங்களோடு சேர்ந்து முயற்சிப்பதும் உண்டு.

மரங்களையும் மதில்களையும் குளிர்விக்கும் ஆர்வத்தில் அந்த வீட்டில் வதிபவர்களுக்கும், குழந்தைகளுக்கும், வீதியைப் பயன்படுத்து பவர்களுக்கும் நோய்களைப் பரப்புகின்றோமே என்ற கவலை கிஞ்சித்தும் எமக்குக் கிடையாது.


தீர்த்தம் என்றதும் இன்னுமொரு கதை ஞாபகத்திற்கு வருகிறது.
அன்று ஒரு குழந்தையை அதன் அம்மம்மா தூக்கிக் கொண்டு வந்திருந்தா.

கூட குழந்தையின் அம்மா. அவள் கைகள் இரண்டும் போதாத அளவிற்கு கூடைகள், பைகள். அவற்றில் குழந்தையின் பொருட்கள் நிறைத்திருந்தன. அவசரத் தேவைக்கானதாம்.

பாவம்! தூக்க முடியாமல் தூக்கிக் கொண்டு வந்திருந்தாள். போத்தல், பிளாஸ்க், சீனி, கரண்டி, பிரஸ் இத்தியாதி. பாரத்தை அருகிலிருந்த மேசையில் பொத்தென இறக்கினாள்.

நல்ல வேளையாக காஸ் குக்கரைக் காணாதது நிம்மதியளித்தது. அதுவும் இருந்திருந்தால் அதிலேயே அடுப்பை மூட்டி தண்ணியைக் கொதிக்க வைத்துப் புட்டிப்பால் தயாரித்திருப்பாள்!

குழந்தைக்கு இரண்டு நாட்களாக வயிற்றோட்டமாம். குழந்தை அம்மம்மாவின் மடியில் வாடிக்கிடந்தது.

நோயின் விபரத்தை அவர்களிடம் கேட்டுக் கொண்டே குழந்தையைப் பரிசோதிக்க ஆரம்பித்தேன். மேலோட்டமான பரிசோதனையை முடித்துக் கொண்டு வயிற்றுப் பக்கம் மெதுவாகக் கையை வைத்தேன்.

திடீரென முகத்தில் இளஞ்சூட்டு நீரினால் அபிஷேகம். என்ன எது என்று நிதானிப்பதற்கிடையில் அம்மம்மாவிற்குச் சிரிப்பு வந்துவிட்டது.

"பிள்ளை டொக்டருக்குத் தீர்த்தம் கொடுத்துவிட்டது" என மனம் நிறைந்து முறுவலித்தாள்.


நல்லகாலம் 'சந்தனமும்' சேர்த்துத் தரவில்லை.

தீர்த்தத்தால் புனிதம் பெற்ற முகத்தைக் கழுவ நான் வாஷ் பேசினை நோக்கி ஓடினேன்.

இப்பொழுதெல்லாம் யாராவது குழந்தையைக் கொண்டுவந்தால் நான் முதலில் அதன் முகத்தைப் பார்ப்பது கிடையாது.

கண்கள் தன்னையறியாமல் கீழேதான் போகும். ஆணா? பெண்ணா? எனப் பார்க்கிறார் எனத்தான் பெற்றோர்கள் நினைப்பார்கள்.

நப்பின் துணி கட்டிக் கொண்டு வராவிட்டால் ஒரு சிறு முன்னேற்பாடு.

குழந்தையின் தலையை எனது பக்கமும் காலை கூட வந்தவரின் பக்கமும் இருக்குமாறு கிடத்திய பின்னர்தான் எந்தக் கதை காரியமும் நடக்கும்.

தீர்த்தம் வந்தால் கூட கொண்டு வந்தவருக்குக் கிடைக்கட்டுமே!

பல ஆண்டுகளுக்கு முன் சிரித்திரன் சஞ்சிகையில் வெளியான கட்டுரையின் ஒரு பகுதி

Post Comment