Thursday, September 24, 2009

காது பொரியல் சட்டியல்ல

கவலை தோய்ந்த முகத்துடன் உள்ளே வந்த அந்த நடுத்தர வயது மாது அருகில் அமர்ந்தபடி சொன்னாள்.

"இந்தக் காது கொஞ்சம் கொஞ்சமா அடைச்சு இப்ப ஒண்டுமெ கேக்குதில்லை..."

"கொஞ்ச நாளைக்கு முந்தி ஒரு நாள் காதுக்குத்து வந்திது. கைவைத்தியம் செஞ்சன். மாறிப் போச்சு. அதுக்குப் பிறகு தான் இந்த அடைப்பு."

மருமகள் மகனுக்கு சொல்லும் இரகசியம் காதில் விளவில்லை என்ற கவலையோ என இடக்கு முடக்காக யோசித்தாலும் கடமையில் கண்ணாக இருந்தேன்.

காதினுள் கட்டுக் கட்டி செவிப்பறையை உடைத்ததால் தான் காது கேட்காமல் விட்டு விட்டதோ என்ற எண்ணம் வந்தது.

"காதாலை சீழ் வடியிறதே அம்மா"

"இல்லை ஐயா, வெறும் அடைப்புத்தான்"

நீர் அல்லது சீழ் வடியவில்லை என்பதால் செவிப்பறை தப்பி விட்டது என எண்ணிக் கொண்டேன்.

காதுக்குடுமி இறுகி அடைத்திருக்கக் கூடும்.

காது சோதிக்கும் கருவியின் ஒளியில் காதைப் பார்த்தபோது, எண்ணெய் வடிந்த காதினுள் கறுப்பாக ஏதோ தெரிந்தது.

இது காதுக் குடுமியல்ல, ஏதோ அந்நியப் பொருள்!

"காதுக்கை என்ன விட்டனியள்?"

"பரியாரியார் தந்த எண்ணைதான், விட்டும் சுகமில்லை."

காதுக்குள்ளை இருக்கும் அப்பொருளை எடுக்க முயற்சித்தேன்.


காதுக்குள் இருக்கும் அந்நியப் பொருளை நோயாளிகளோ, அல்லது உறவினர்களோ எடுக்க முயல்வது ஆபத்தானது. தற்செயலாக செவிப்பறையை புண்படுத்திவிட்டால் நிரந்தரமாகச் செவிப்புலனை இழந்து விடலாம்.

எனவே பயிற்சி பெற்ற டாக்டரே இதைச் செய்வது உசிதமானது. பல சந்தர்ப்பங்களில் நோயாளியை மயக்க வைத்தே இதை எடுக்க நேரிடலாம்.

அந்தப் பொருள் காதினுள் அவ்வளவு ஆழத்தில் இல்லாததாலும், அந்தப் பெண்மணி ஒத்தாசையாக இருந்ததாலும் சுலபமாக எடுக்க முடிந்தது.

எடுத்துப் பார்த்தபோது அது காதுக் குடுமி அல்ல உள்ளி! எண்ணெய்க்குள் விழுந்த எலிபோல், ஊறி உப்பிக் கிடந்தது.

உள்ளிக்கு இத்தனை பயன்களா? வியந்தேன்!

"என்னம்மா, காதுக்குள்ளை உள்ளி. சாப்பிட எடுத்ததை மறந்து காதுக்குள்ளை வச்சிட்டியளோ?
"

"ஐயையோ..." நாணினாள்.

".. காதுக்குத்துக்கு எண்டு உள்ளி சுட்டு வச்சனான் எடுக்க மறந்து போனேன்|"என்றாள்.

"நல்ல காலம் இப்பெண்டாலும் எடுத்தது, இல்லையெண்டால் காது அவிஞ்சு அழுகியிருக்கும்" என அழுத்தமாகச் சொன்னேன்.

காதுக்குள்ளை முளைத்து வளர்ந்திருக்கும் என்று சொல்லியிருக்கலாமோ?

காது பொரியல் சட்டியல்ல எண்ணெயும் உள்ளியும் விடுவதற்கு.

டொக்டர்.எம்.கே.முருகானந்தன்.

Post Comment

16 comments:

அ. நம்பி said...

//காது பொரியல் சட்டியல்ல எண்ணெயும் உள்ளியும் விடுவதற்கு.//

இந்தப் பழக்கம் சிலரிடம் உண்டு. விளைவுகளை அறியாமல் செய்கிறார்கள்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

துளசி கோபால் said...

ஐயோ...... என்னோட கேட்டுக்கோடி உருமி மேளம் நினைவுக்கு வருது டொக்டர் ஐயா.

அதுலே நீங்க பின்னூட்டத்தில் சொன்ன 'டாக்டரின் டயறி' இதுதானா?
ஹாஹா.....

இன்னும் நிறைய இருக்கணுமே...எழுதுங்க.

பேனாமுனை said...

//காது பொரியல் சட்டியல்ல எண்ணெயும் உள்ளியும் விடுவதற்கு//
நகைச்சுவை கலந்த நல்ல பதிவு.வாழ்த்துக்கள் டாக்டர்

Dr.எம்.கே.முருகானந்தன் said...

பேனாமுனை Said "நகைச்சுவை கலந்த நல்ல பதிவு.வாழ்த்துக்கள் டாக்டர்"

நன்றி

Dr.எம்.கே.முருகானந்தன் said...

துளசி கோபால் said...
"அதுலே நீங்க பின்னூட்டத்தில் சொன்ன 'டாக்டரின் டயறி' இதுதானா?
ஹாஹா....."

ஆமாம் அதே டாக்டரின் டயறி நூலில் வெளிவந்த விடயம்தான்.

துபாய் ராஜா said...

அனைத்துப்படங்களும் அருமை.

//மருமகள் மகனுக்கு சொல்லும் இரகசியம் காதில் விளவில்லை என்ற கவலையோ என இடக்கு முடக்காக யோசித்தாலும் கடமையில் கண்ணாக இருந்தேன்.//

குறும்பு கொப்பளிக்கும் அழகான பதிவு.

வாழ்த்துக்கள் அய்யா.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

துபாய் ராஜா said... "அனைத்துப்படங்களும் அருமை.
குறும்பு கொப்பளிக்கும் அழகான பதிவு."

கருத்துரைக்கு மிக்க நன்றி.

மின்னுது மின்னல் said...

நானும் அடிக்கடி காதுகுள்ள எதாவது விடுவேன் :)

இனி பயமா இருக்கு..!!

இறக்குவானை நிர்ஷன் said...

நல்லதொரு பதிவு ஐயா.
பலர் சொல்லித்திருந்துவதில்லை. பட்டறிவு தான் அவசியமாகிறது

மருதமூரான். said...

வணக்கம் டொக்டர்……..

இந்த பதிவை வாசித்த பின்னர் என்னுடைய வகுப்புத் தோழன் ஒருவன் நிறக்கட்டியை காதுக்குள் விட்டு அது முறிந்தவுடன், அதனை எடுக்க மீண்டும் பென்சிலால் காதைக் குடைந்து காதில் புண்ணாக்கிய பல மாதங்களாக அவதிப்பட்டதை அறிவேன். (அந்த நண்பன் தற்போது உயிருடன் இல்லை. 4ஆம் தரத்தில் கல்வி கற்கும் போது இந்த சம்பவம் நிகழ்ந்ததாக ஞாபகம்.)

தங்களுக்கு ஒரு புதுத்தகவல்: பருத்தித்துறையிலுள்ள தங்களின் மருத்துவ நிலையத்துக்கு தங்களிடம் நான் மூன்று, நான்கு முறை சிகிச்சைக்காக தந்தையாருடன் வந்துள்ளேன். அது, 1990களின் முற்பகுதி. அப்போது, எனக்கு 5 அல்லது 6 வயதிருக்கும்.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

இறக்குவானை நிர்ஷன் said... "நல்லதொரு பதிவு ஐயா.
பலர் சொல்லித்திருந்துவதில்லை. பட்டறிவு தான் அவசியமாகிறது"

வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

நண்பனின் அனுபவததை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி மருதமூரான்.

என்னுடனான பழைய தொடர்பை ஞாபகப்படுத்தியதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.

Thooli said...

Dear Sir, Only today I referred your Blog and seems to very informative. I don't thing that no other doctors are doing a service like this in Tamil. Congradualtions sir. Now I am following in Blog and also getting your "Hi Nalama" in my google reader.

Anbudan,

Veera Senthil Kumar
veerasenthilrv@gmail.com
Coimbatore.

Dr.எம்.கே.முருகானந்தன் said...

உங்கள் அன்புக்கும் கருத்திற்கும் நன்றி Veera Senthil Kumar(Thooli)

எஸ் சக்திவேல் said...

என் சிறுவயது ஞாபகம் - யாழ்ப்பாண பஸ்
ஸ்டாண்டில் கையில் கம்பி மாதிரி ஒன்றுடன் நிற்பார்கள். "ஐயா, காது குடும்பி எடுக்க வேண்டுமா? 50 சதம் மட்டும்தான்" என்பார்கள். சம்மதித்தால், உடனே, திடீர் வைத்தியராகி அந்த இடத்தையே மினி கிளினிக் ஆக்கி, அந்தக் கம்பி மாதிரியிருப்பதைக் காதில் விட்டு, "குடும்பி" எடுப்பார்கள். என் அப்பா அவங்களைக் கிட்ட விடவே மாட்டார்!. தப்பியது என் காது.

Post a Comment

என்ன சொல்லப் போறீங்க? சொல்லாமல் போயிடாதீங்க